ஈரோடு, ஜூன் 3-மாணிக்கம்பாளையம் பகுதியில் சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகளுக்கு நடுவில் தேங்கி நிற்கும் கழிவு நீரைஅகற்ற வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி 20ஆவது வார்டுக்குட்பட்ட மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பாதாள சாக்கடைதிட்டத்தில் வீடுகளுக்கு இணைப்புகள் கொடுக்கப்படவில்லை. ஆனால் சில தனிநபர்கள் தன்னிச்சையாக தங்கள் வீடுகளுக்கு பாதாள சாக்கடை குழாய்கள் கழிவு நீர் செல்லும் வகையில் இணைப்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில்கடந்த ஒரு வார காலமாக வீடுகளுக்கு நடுவில் செல்லும் சாலையில் பாதாள சாக்கடைகுழாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுகள் தேங்கி துர்நாற்றமும், கொசுத்தொல்லையும் ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து, பாதாள சாக்கடைஅடைப்பை சில நாட்களுக்கு முன்பு நகராட்சியினர் சரி செய்திருந்தனர். இந்நிலையில் மீண்டும் புதிதாக அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கிநிற்கிறது. இது தொடர்பாக அதிகாரிகளுக்கு புகார் மனு அளிக்கப்படும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் திங்களன்று மனு அளித்தனர்.